டெல்லியில் சம்பளத்தை குறைத்து கொடுத்த முதலாளியை, ஊழியர் கழுத்தை அறுத்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தஸ்லீம் என்ற இளைஞர் டெல்லியில் ஓம் பிரகாஷ் என்ற பால்முகவரிடம் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கொரோனாவால் வருமானம் குறைந்ததாக கூறி, தஸ்லீமின் சம்பளத்தை ஓம் பிரகாஷ் குறைத்து கொடுத்துள்ளார்.
ஊதிய குறைப்பு தொடர்பாக தஸ்லீம் கேட்டபோது, ஓம் பிரகாஷுக்கும் அவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கோவமுற்ற ஓம் பிரகாஷ் தஸ்லீம் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தஸ்லீம், ஓம் பிரகாஷ் தூங்கும் போது அவரை உருட்டுக் கட்டையால் தாக்கி, கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.
பின்னர் ஓம்பிரகாஷின் உடலை வீட்டின் அருகே இருந்த கிணற்றில் வீசிவிட்டு, ஒன்றும் தெரியாதவனாய அங்கேயே இருந்து வந்துள்ளான்.
இதனிடையே, உறவினர்கள் ஓம்பிரகாஷை தேடத் தொடங்கி, அதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை அறிந்து தஸ்லீம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.
பல்வேறு பகுதிகளிலும் ஓம் பிரகாஷ் தேடப்பட்ட நிலையில், கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, மேற்கொண்ட ஆய்வில் அழுகிய நிலையில் ஓம் பிரகாஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடையே, ஓம்பிரகாஷின் பைக், மற்றும் செல்போனுடன் மாயமான தஸ்லீமை போலீசார் டெல்லியில் கைது செய்து, கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.