முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் ‘கேன்சலேஷன்’ கட்டணத்துடன் சேர்த்து 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு செய்வதென்பது அதன் சேவையை பெறுவதற்கான ஒப்பந்தமாகும். அதற்கான டிக்கெட் உறுதியான போதும் அதனை ரத்து செய்வதால் ரயில் சேவையை வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்திற்கு இழப்பீடாக இதுவரை கேன்சல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அதற்கும் 5% ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும்.
அதாவது, முதல்வகுப்பு ஏசியில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் உறுதி செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்யப்பட்டால் வழக்கமாக பிடிக்கப்படும் ₹240 உடன் 5% ஜிஎஸ்டி சேர்த்து ₹252 வசூலிக்கப்படும். அதேபோல் இரண்டாம் வகுப்பு ஏசி கோச் டிக்கெட்டாக இருந்தால் ₹200 உடன் 5% ஜிஎஸ்டி, மூன்றாம் வகுப்பு ஏசியாக இருந்தால் ₹180 உடன் 5% ஜிஎஸ்டி சேர்த்து ரத்து கட்டணம் வசூலிக்கப்படும். அதே நேரத்தில், இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் மற்றும் இருக்கை வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால் ஜிஎஸ்டி வசூலிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




