பிரதமர் மோடி பெற்ற 1200க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் செப்டம்பர் 17ம் தேதி முதல் ஏலம் விடப்படுகின்றன.
பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம். அந்த பரிசு பொருட்களை அவ்வப்போது ஆன்லைன் மூலம் ஏலம் விடுவது வழக்கம். ஏற்கெனவே, 3 முறை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ளது. இந்த நிலையில் 4வது தடவையாக, வருகிற 17ம் தேதி ஏலம் தொடங்குகிறது. இதில், 1200க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. அக்டோபர் 2ம் தேதியுடன் ஏலம் முடிவடைகிறது.
பரிசு பொருட்களின் ஆரம்ப விலை ₹100 முதல் ₹10 லட்சம் வரை இருக்கிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த ஏலத்தில் கமலாபதி சிலை, அனுமன் சிலை, சூரியன் ஓவியம், திரிசூலம், மகாலட்சுமி கடவுள் சிலை, ஏழுமலையான் படம், டி-சர்ட், குத்துச்சண்டை கையுறைகள், ஈட்டி, பதக்கம், விளையாட்டு வீரர்கள் கையெழுத்திட்ட டென்னிஸ் மட்டை, ஓவியங்கள், சிற்பங்கள், கைவினை பொருட்கள், பாரம்பரிய அங்கவஸ்திரம், சால்வை, தலைப்பாகை, வாள் ஆகிய பொருட்களும் அடங்கும்.