ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டார் அருகே லாம் பகுதியில் அமைந்துள்ள எல்லையை தாண்டி வந்து, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை சுமார் 1.00 மணியளவில் நடந்த இந்தத் திடீர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலத்தக் காயமடைந்தார். பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு, இந்திய ராணுவமும் தக்கப் பதிலடி கொடுத்தது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி வீர மரணமடைந்ததாக, ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று பாகிஸ்தானை சேர்ந்த ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு, அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், சம்பவம் குறித்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
2003-ஆம் ஆண்டு செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறியும், பாகிஸ்தான் ராணுவத்தினா் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




