இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 69,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் ஆந்திர உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் அதிகரித்து வரும் பாதிப்புகளால் இந்தியா கொரோனா பாதிப்பில் நாள்தோறும் புதிய உச்சம் அடைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய அளவில் 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், புதிய உச்சமாக 69,878 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 69, 878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,75,702 ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் மட்டும் 14,161 பேருக்கும், ஆந்திராவில் 9,544 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 945 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியானோரின் எண்ணிக்க்கை 55,794 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும், புதிய சாதனையாக 10,23,836 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம், இந்தியாவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை சுமார் 3.44 கோடியை கடந்துள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 22,22,578 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 6,97,330 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.




