மத்திய அரசு அறிமுகப்படுத்திய விண்வெளி துறை சீர்திருத்தங்கள் இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு சிறந்த முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ (ISRO) தலைவர் கே.சிவன் இன்று வியாழக்கிழமை, விண்வெளித்துறையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள சீர்திருத்தங்கள் மிக சிறந்த மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும் என்று தெரிவித்ததோடு, இஸ்ரோ எப்பொழுதும்தனியார்மயமாக்கப்படாது என்று உறுதி அளித்தார்.
வெபினார் உரையாடலில் கலந்து கொண்ட சிவன், விண்வெளித்துறையை தனியார் மயமாக்கும் நோக்கத்தில், எந்தவித சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
அரசு அறிவிப்பில் விண்வெளித் துறையில் மேற்கொள்ள போகும் சீர்திருத்தங்கள் வெளியான உடனேயே, இது இஸ்ரோவை தனியார்மயமாக்க வழிவகுக்கும் என்பது போன்ற பல தவறான சித்தரிப்புகளும் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.
எனவே இஸ்ரோ தனியார் மயமாக்கப்படாது என்பதை நான் உங்களுக்கு மீண்டும் உறுதிபடக் கூறுகின்றேன், ”என்று சிவன் தெரிவித்தார்.
முன்னர் தெரிவிக்கப்பட்ட விண்வெளி நடவடிக்கை வரைவு மசோதா தற்போது இறுதி செய்யப்பட உள்ளது என்றும் இது விரைவில் ஒப்புதலுக்காக மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
விண்வெளித் துறையில் இந்தியாவின் திறனை ஊக்குவிக்கும் வண்ணம் என்ற தலைப்பில் நடைபெற்ற வெபினாரில் பேசிய அவர் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே தனியார் துறைக்கும் விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கொடுத்து ஊக்குவிப்பதற்கு ஆகும் என்று அவர் தெரிவித்திருந்தார்.