ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட கேரள தங்கக் கடத்தல் கும்பல், கடந்தாண்டு நவம்பரில் இருந்து, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 200 கிலோ தங்கத்தை கடத்தியுள்ளதாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, கம்யூனிஸ்ட் அரசு அமைத்துள்ளது .திருவனந்தபுரத்தில் உள்ள, மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்படுவது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.
இது தொடர்பாக, யு.ஏ.இ., துாதரகத்தில் பணியாற்றி வந்த சரீத், முன்னாள் ஊழியரான, ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்வப்னா சுரேஷ் சார்பில்,ஜாமீன் கேட்டு கொச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, இந்த வழக்கை விசாரித்து வரும், என்.ஐ.ஏ., சார்பில் விரிவான பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா உள்ளிட்டோர், கடந்தாண்டு, நவம்பரிலிருந்து, யு.ஏ.இ.,யில் இருந்து தங்கம் கடத்தி வந்துள்ளனர் என்றும் இவ்வாறு, 20 முறை, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 200 கிலோ தங்கத்தை கடத்தி உள்ளனர் என்றும் அது இங்குள்ள சிலரிடம் ஒப்படைத்துள்ளனர். அதற்காக பல கோடி ரூபாயை இவர்கள் பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரநிலையை சீர்குலைக்கவே, இந்தக் கடத்தல் நடக்கிறது என்றும் அதில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, யு.ஏ.இ., உள்பட பல நாடுகளில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டியது கட்டாயம் அதனால், விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக ஜாமின் அளிக்கக் கூடாது. இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, தங்கக் கடத்தல் வழக்கில், மேலும் இருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.




