ஒடிசா மாநிலத்தில் மக்களுக்கு சேவை செய்யும் வகையில் மருத்துவர் ஒருவர் வெறும் ஒரு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து அசத்தி வருகிறார்.

சாம்பல்பூர் மாவட்டத்தில் ஏழைகளுக்கும் மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ‘ஒரு ரூபாய்’ மருத்துவமனை ஒன்றை திறந்துள்ளார் மருத்துவர் ஒருவர். புர்லா என்ற இடத்தில் இயங்கி வரும் விம்சார் மருத்துவ கல்லூரியில் ஷங்கர் ராம்சந்தானி என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். வேலை நேரம் போக ஒய்வு நிறத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார். ஆரம்பத்தில் விம்சாரில் சீனியர் ரெசிடெண்ட் பதவியின் காரணத்தினால் அவரால் மருத்துவமனையை தொடங்க முடியவில்லை.

தற்போது உதவி பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு தனியாக கிளினிக் தொடங்கி இருக்கிறார் ஷங்கர். இதுபற்றி அவர் கூறும்போது வெகு நாளாகவே மக்களுக்கு நான் கற்ற மருத்துவக் கல்வியை கொண்டு உதவி செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்து வந்தது. இப்போது அது நடந்துள்ளது. இந்த கிளினிக்கை வாடகை கட்டடத்தில் தான் தொடங்கி இருக்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பாக இதை பார்க்கிறேன் என்றும் மக்களிடம் ஒரு ரூபாய் வசூலிப்பதற்கு காரணம் ‘நான் அவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கவில்லை’ என்பதை உணரவும், என்னிடம் சந்தேகம் இருந்தால் கேட்பதற்கும் தான். நான் மக்களின் சேவகன்” என்றார்.




