தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 300க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட, ‘பாப்புலர் பைனான்ஸ்’ என்ற நிதி நிறுவன நிர்வாகிகள் 2 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்து தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்தனம்திட்டாவில் கடந்த 1965ல் தொடங்கப்பட்ட ‘பாப்புலர் பைனான்ஸ்’ நிதி நிறுவனம் நகைக்கடன், பணம் முதலீடு, வெளிநாட்டு பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கி வருகிறது.
நாளடைவில் படிப்படியாக வளர்ந்து இந்நிறுவனம் தற்போது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் 300க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. ஏராளமானோர் முதலீடு செய்துள்ள இந்நிறுவனத்திற்கு, தற்போது நிர்வாக இயக்குநராக தாமஸ் டேனியல் உள்ளார்.
இந்நிலையில், பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த சிலர் நிதிநிறுவனத்தில் இருந்த பணத்தை காலாவதி முடிந்த பின்னர் திருப்பி கேட்டுள்ளனர். ஆனால், பல மாதமாக அவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை. இதையடுத்து, 10க்கும் மேற்பட்டோர் பத்தனம் திட்டா போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில், இந்நிறுவனத்தின் அனைத்து கிளைகளும் திடீரென மூடப்பட்டன. நிர்வாக இயக்குநர் தாமஸ் டேனியல், அவரது மனைவி பிரபா டேனியல், மகள்கள் ரினு மரியன் தாமஸ், ரியா ஆன் தாமஸ் ஆகிய 4 பேரும் திடீரென தலைமறைவாகி உள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கேரளா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், இந்த நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளதால் பல பயனாளர்கள் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். பல கிளைகள் முன்பு போராட்டமும் நடந்தது. இந்த நிதி நிறுவனம் 2 ஆயிரம் கோடி மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, டெல்லி விமான நிலையத்தில் நேற்று ரினு மரியன் தாமஸ், ரியா ஆன் தாமஸ் ஆகிய 2 பேரும் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது போலீசில் பிடிபட்டனர். டெல்லி போலீசார் கேரள போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கேரள போலீசார் டெல்லி விரைந்துள்ளனர்.
‘தமிழகத்தில் 15 கிளைகள்’
‘பாப்புலர் பைனான்ஸ்’ நிறுவனத்திற்கு தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 15க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. சென்னையில் ஆதம்பாக்கம், அடையாறு உட்பட 7 இடங்களிலும், குமரி மாவட்டத்தில் தோவாளை, குலசேகரம், மார்த்தாண்டம், வெட்டூர்ணிமடம், தக்கலை ஆகிய 5 இடங்களிலும் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.