வழக்கமாக பல்வேறு வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் பாரத பிரதமர் மோடி.

கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஓராண்டுக் காலமாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாமல் இருந்து வந்தார்.
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு ஓராண்டுக்குப் பின் கடந்த மார்ச் மாதம் வங்கதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். நான்கு நாள் பயணமாகச் சென்ற அவர் ஐநா பொதுக்கூட்டம், அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜி20 மாநாடு மற்றும் ஐநா பருவ நிலை மாற்றம் குறித்த மாநாடுகளில் பங்கேற்பதற்காக ஐந்து நாள் பயணமாக இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ளார் என்றும், இதற்காக வரும் 29ஆம் தேதி டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் கிளம்புகிறார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதலில் இத்தாலி செல்லும் பிரதமர் மோடி வாடிகனில் போப் ஆண்டவரை சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது எது குறித்து இருவரும் உரையாட போகின்றனர் என்பது குறித்த விவரங்கள் எதுவும் இல்லை. பின்னர் ரோம் நகரில் அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டைத் தொடர்ந்து பருவநிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க கிளாஸ்கோ செல்கிறார். இந்த மாநாடு நவம்பர் 1 முதல் 2ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இந்த மாநாடுகளில் கொரோனா தொற்றுக்குப் பிறகு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வது, பருவநிலை மாற்றம், வறுமை ஒழிப்பு, ஆகியவை குறித்து தீர்வுகள் அளிக்கப்பட உள்ளன. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.




