PSLV C 49 ராக்கெட் மூலம் நவீனரக EOS-01 புவிகண்காணிப்பு செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட் ஏவும் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த மாதத்தில் இருந்து கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுகிறது. இதனால், ராக்கெட் ஏவும் பணிகளை இஸ்ரோ மீண்டும் தொடங்கியது. அதன்படி, PSLV C-49 ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணிகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து PSLV C-49 ராக்கெட் மூலம் EOS-01 என்ற புவிகண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ நேற்று மதியம் 3.02 க்கு ஏவுவதாக இருந்த ராக்கெட் சிறிது மோசமான வானிலை காரணமாக 10 நிமிடம் தாமதமாக 3.12 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. நவீனரக EOS- 01 செயற்கைகோள் புவிகண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளை துல்லியமாக மேற்கொள்ளும்.
இதனுடன் இணைந்து வணிகரீதியாக லித்தி வேனியா நாட்டிற்கு சொந்தமான 1 செயற்கைகோளும்,ஹோண்டுராஸ், லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான மொத்தமாக 4, அமெரிக்காவிற்கு சொந்தமான 4 செயற்கைகோள்கள் என 9 வெளிநாட்டு செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டது.
PSLV C-49 ராக்கெட் 44.5 மீட்டர் உயரம் கொண்டது. இது PSLV ராக்கெட் வரிசையில் 51 வது ராக்கெட் ஆகும்.