ரயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த உபயோக கட்டணம் விதிக்க ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளதால், ரயில் டிக்கெட் கட்டணம் சற்று உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் சமீபத்தில் தெரிவித்தார். இதனிடையே, ரயில்வேதுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தரமான உணவு வழங்குவதில் உறுதியாக உள்ளது.
அதே சமயம், ரயில் நிலையங்களை சுத்தமாக வைக்கவும், பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் ரயில்வே துறை, ரயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த புதியதாக “உபயோக கட்டணத்தை” விதிக்க முடிவு செய்துள்ளது. மக்கள் அதிகம் கூடுகின்ற முக்கிய ரயில் நிலையங்களில் இந்த கட்டணம் விரைவில் வசூலிக்கப்பட உள்ளது.
இதனால் ரயில் டிக்கெட் கட்டணம் சற்று உயருகிறது. ரயில் நிலையங்களை உபயோகிக்கும் கட்டணம் வசூலிப்பதன் மூலம் ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தவும், கட்டமைப்பு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதன் மூலம் பயணிகளுக்கு கூடுதலான வசதிகள் செய்து தரவும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ரயில்வே வாரிய தலைவர் யாதவ் பிரசாத் கூறியதாவது:-
முக்கிய ரயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த ஒரு சிறிய கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களின் மறு வளர்ச்சிக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படும். நிலையம் முழுவதும் பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்க இது உதவும். இந்த கட்டணம் மிக குறைந்த அளவில் இருக்கும். பயணிகளை பாதிக்கும் வகையில் இருக்காது. உலகத் தரமான வசதிகளை ரயில்வே கொடுப்பதற்கு இது பயன் உள்ளதாக அமையும்.
இந்தியன் ரயில்வே துறையில் 7 ஆயிரம் ரயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் 10 முதல் 15 சதவீத ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த கட்டணம் விதிக்கப்படும். 300 முதல் 1000 நிலையங்களில் மட்டும் உபயோக கட்டணம் வசூலிக்கப்படும், என அவர் கூறியுள்ளார்.




