வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் 44 செமி-எக்ஸ்பிரஸ் ரயில் உற்பத்திக்கான சர்வதேச டெண்டரை ரயில்வே அமைச்சகம் ரத்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியா-சீனா இடையே எல்லையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, சீன நிறுவனங்கள் உடனான வணிக ஒப்பந்தங்களை இந்திய தவிர்த்து வருகிறது. முதற்கட்டமாக 59 சீன செயலிகளை தடை செய்த மத்திய அரசு, அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் சீன நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்து வருகிறது.
அந்த வகையில், வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் 44 செமி-எக்ஸ்பிரஸ் ரயில் உற்பத்திக்கான சர்வதேச டெண்டரை சீன நிறுவனம் கைப்பற்ற முயற்சித்ததால் அந்த டெண்டரை ரயில்வே அமைச்சகம் ரத்து உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட, டெண்டர் விண்ணப்பம் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் இந்த திட்டத்திற்கான டெண்டர் கோரப்பட்ட நிலையில், சீனாவை சேர்ந்த சிஆர்ஆர்சி யோங்ஜி எலெக்ட்ரிக் கோ லிமிடெட் எனும் நிறுவனத்தின், இந்திய கூட்டாளியான ஜேவி எனும் நிறுவனமும் விண்ணப்பித்தது.
இந்நிலையில், ஒப்பந்தத்தை கைப்பற்றுவதற்கான இறுதி பட்டியலில், அந்நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றதால் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.