நவம்பரில் மாதத்தில் தொடங்கவுள்ள சபரிமலை சீசனுக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழை காண்பித்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிப்படுவார்கள் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட முதல் மாநிலமாக இருந்தது கேரளம் தான். பல்வேறு அதிரடி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போதும் ஒரு சில இடங்களில் பாதிப்பு இன்னும் குறைந்த பாடில்லை. இந்த நிலையில் தான் சபரிமலை சீசன் வருகின்ற நவம்பர் 16 ஆம் முதல் தொடங்கவுள்ளது. மண்டல மற்றும் மகர பூஜைக்காக அதிகளவிலான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தும், விரதமிருந்தும் 18 படிகளில் ஏற வேண்டும் என்ற எண்ணத்தில் வருவார்கள்.
ஆனால் கொரோனா சமயத்தில் கோவில் நடை திறக்கப்படுவதால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அமைச்சர் கடகம்பள்ளி சுந்தரேசன் தலைமையில், திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தலைவர் உள்பட அதிகாரிகளுடன் உயர்நிலை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் சவால் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதால் இந்தாண்டு குறைந்த அளவிலான பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்டல மற்றும் மகர பூஜைகள் நடத்துவதில் எந்தவித மாற்றமும் இல்லை ஆனால் பக்தர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவத்தனர். அதன்படி நவம்பர் 16 ஆம் தேதி முதல் கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது கொரோனா இல்லை என பரிசோதனை செய்து கொண்டு, அதற்கான சான்றிதழ்களை காண்பித்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.




