மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி வசுந்தரா, நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றதால் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார். ஆனால் விசாரணையில், மாணவி வசுந்தரா எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல், பொய் வழக்கு தொடர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவிக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் அம்ராவதி நகரை சேர்ந்த மாணவி வசுந்தரா போஜன், கடந்த மாதம் நடந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதினார். கடந்த சில முன் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவி வசுந்தரா பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றார். இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்த மாணவி வசுந்தரா, “10-ஆம் வகுப்பு தேர்வில் 93.4% மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பு தேர்வில் 81.85% மதிப்பெண்களும் பெற்றுள்ளதாகவும், நீட் தேர்வில் 600 மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை அதுல் சந்துர்கர், நிதின் சூரியவன்ஷி அடங்கிய நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. மேலும், இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை, மத்திய சுகாதாரத் துறை, கல்வித் துறை உள்ளிட்டவை அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து மாணவி வசுந்தரா போஜனின் விடைத்தாளை தேசிய தேர்வு முகமை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த விடைத்தாள், எந்தவொரு கேள்விக்கும் விடை அளிக்கப்படாமல், வெறும் வெற்றுத்தாளாக இருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும், மாணவி வசுந்தரா தனது குற்றச்சாட்டில் உறுதியாகவே இருந்தார்.
இதனைதொடர்ந்து மாணவியின் வழக்கறிஞர் மாணவியிடம் தனியாக பேசியபோது, மாணவி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின் மாணவியின் வழக்கறிஞர் நீதிபதிகளிடம், “மாணவி வசுந்தரா நீட் தேர்வில் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை எனவும், பயத்தினாலும், தனது தவறை மறைக்க நினைத்ததாலும், பெற்றோர் உட்பட அனைவரிடமும் பொய் கூறியுள்ளார் எனவும் கூறியுள்ளார். மேலும், மாணவின் சார்பில் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
மாணவியின் இந்த செயலுக்கு கடும் கண்டனமும், அதிருப்தியும் தெரிவித்த நீதிபதிகள், மாணவி வசுந்தராவுக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.