உத்தரகாண்ட் மாநிலம் கெம்டி நீர்வீழ்ச்சி அருகே இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கியது.
இந்தோ திபெத்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த காவலர்கள், உத்தரகாண்ட் மாநிலம் முசோரி அருகே பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். குறுகிய வளைவுகளைக் கொண்ட சாலையில் சென்றபோது பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாகச் சென்ற பேருந்து, வளைவில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது மோதி அதன் மீது ஏறி நின்றது. கெம்ட் நீர்வீழ்ச்சி அருகே இந்த விபத்து ஏற்பட்டது.
பேருந்தின் முன்பகுதி பெரும்பாலும் அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. உள்ளே இருந்த வீரர்கள் ஒரு அச்சத்தில் அப்படியே உறைந்துபோயினர். ஒரு வழியாக சுதாரித்த காவலர்கள், பேருந்தில் இருந்து பின்பக்கம் மற்றும் ஜன்னல் வழியாக லாவகமாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்து கொஞ்சம் அதிக வேகத்தில் வந்திருந்தால் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.