![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2022/11/998986-tattoo.webp?resize=750%2C450&ssl=1)
சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு தொடர்ச்சியாக ஊழியர்கள் நீக்கம் என அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று என்ன நடக்குமோ என அவரது நிறுவன ஊழியர்கள் பயந்து நடுங்கிவரும் நிலையில் எலான் மஸ்க்கால் ஈர்க்கப்பட்ட அவரது ரசிகர் ஒருவர், அவரின் பெயரை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுடன் சேர்த்து நெற்றியில் பச்சைக்குத்தியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேசிலைச் சேர்ந்த இளைஞர் ரோட்ரிகோ, ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்தின் மூலம் எலான் மஸ்க் தன்னையும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச்செல்வார் என்ற கனவுடன் அந்த இளைஞர் இத்தகைய செயலைச் செய்துள்ளார்.
ரோட்ரிகோவுக்கு இன்ஸ்டாகிராமில் 490,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். இது தொடர்பாக இளைஞர் ரோட்ரிகோ பேசும்போது, எலான் மஸ்க் எனக்கானவர். அவர் மீதான என் அன்பை விவரிக்க முடியாது. அவர் என்ன செய்தாரோ, என்ன செய்ய இருக்கிறாரோ, அவை அனைத்தும் மக்களுக்கானது. அவர் மக்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லவுள்ளார்.
இதன் மூலம் அவரின் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கும். அவர் எனக்கு மிகப்பெரிய உத்வேகம். அவருடன் சேர்ந்து ஸ்பேக்ஸ் எக்ஸ் ராக்கெட்டில் 2024ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். எனக்கு 20 வயதில் ஒரு மகள் இருக்கிறாள், அவளுக்கு இவை அனைத்தும் தெரியும், நான் ஒரு நாள் செவ்வாய் கிரகத்திற்குச் சென்றால் அது மனிதகுலத்தின் நன்மைக்காக என்று அவளுக்குத் தெரியும் என கூறினார். கடந்த 2016ஆம் ஆண்டு வரை ரோட்ரிகோ பிரேசிலில் சிறைத் துறை அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.