ஊரடங்கு உத்தரவால் கால் டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய தேவைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் சமூக பரவலாகிவிடக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் பொது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
விமானம், ரயில், பேருந்து சேவைகள் முடக்கப்பட்டாலும், அந்தந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் தடை செய்யப்படாமல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்களான கால்டாக்சி ஓட்டுநர்கள் வருமானம் இல்லாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பிரச்னையில் இந்த ஓட்டுநர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தினமும் வாகனத்தை இயங்கினால்தான் வருமானம் என்ற சூழ்நிலையில் அடுத்த வேளை உணவுக்கே மற்றவர்களிடம் உதவி பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
சொந்தமாக கால்டாக்சி வைத்திருக்கும் ஓட்டுனர்கள் தினசரி குடும்பத்தை நடத்துவது பெரும் போராட்டமாக உள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில் அமைப்பு சாரா நல வாரியத்தில் பதிவுபெற்ற ஓட்டுநர்கள் மிகக்குறைவு. அதனால் அனைத்து ஓட்டுநர்களுக்கும் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என திருப்பூரில் தமிழ்நாடு உழைப்பாளர் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவசர காலங்களில் பயணிப்பதற்கும், மருத்துவமனைகள் செல்வதற்கும் உரிய இடத்திற்கு உரிய நேரத்தில் சென்று சேர்வதற்கும் உறுதுணையாக இருப்பவர்கள் ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்கள். அவர்களுக்கான தேவைகளை அறிந்து உரிய நேரத்தில் அது கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.