உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் யூஜின் நகரில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தகுதிச்சுற்றில் 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இந்நிலையில், இன்று நடந்த இறுதிச்சுற்று போட்டியில், நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். இதன்மூலம் 2003ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது.(2003ல் மகளிருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வெண்கலம் வென்றார்).
ஈட்டி எறிதலில் கிரெனடாவை சேர்ந்த நடப்பு சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வென்றார். இவர் 90.54 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார். வெண்கல பதக்கத்தை செக் குடியரசின் ஜாக்கூப் வாட்லெஜ் வென்றார். இவர் 88.09 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார்.
தற்போது தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். இந்த போட்டியில் பங்கேற்ற மற்றுமொரு இந்திய வீரர் ரோஹித் யாதவ் 10வது இடம் பிடித்து அசத்தினார். அவர் 78.72 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். இதையடுத்து நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.