தாய் திட்டியதால் மனமுடைந்து 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மனைவி பானு.இந்த தம்பதியருக்கு திருமணமான சில வருடங்களில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு பாக்கியலட்சுமி என பெயர்சூட்டி மகிழ்ந்த நிலையில் சிறிது நாட்களிலேயே கணேஷ் உடல்நலக் குறைவால் இறந்து போனார்.

இதையடுத்து, பானு தனது சொந்த ஊரான திருப்பெரும்புதூர், திருமங்கை ஆழ்வார் பகுதிக்கு தனது குழந்தையுடன் சென்று குடியேறினார். பானு ஆயக்களத்தூர் அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறார். பாக்கியலட்சுமி திருப்பெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், மகள் நன்றாக படிக்கவில்லை என்று பானு அவ்வப்போது திட்டுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக நேற்று, பாக்கியலட்சுமி ஆன்லைனில் கேம் விளையாடியதை பார்த்த பானு படிக்கும்படி திட்டி அறிவுரை கூறியுள்ளார். இதில் மனமுடைந்த மகள் பாக்கியலட்சுமி கழிவறையில் துப்பட்டாவால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் மகள் திரும்பாததை கவனித்த பானு சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது, தூக்கில் தொங்கியபடி மயக்க நிலையில் இருந்த மகளை மீட்டு திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பெற்றோர்கள் கவனத்திற்கு: சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டால் பல்வேறு இளைஞர்கள் & மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதோடு மட்டுமல்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனை தடுக்க மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் குழந்தைகள், ஆன்லைனில் கேம் விளையாடினால், அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அதில் இருந்து வெளியே வர உதவி செய்யுங்கள்.
மனிதனாக பிறந்த அனைவருக்கும் வேதனை, கஷ்டங்கள் வருவது சகஜம்தான். இருப்பினும், இதெல்லாம் நிரந்தரம் அல்ல. தற்கொலை எதற்கும் தீர்வாகாது. இதுபோன்ற எண்ணங்கள் வந்தால் உடனே இந்த எண்ணிற்க்கு அழையுங்கள். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்:044-24640050.
வாழ்வோம்! வாழ்ந்துக் காட்டுவோம்!!
ஆதி அன்பின் ஊற்று




