தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. பொறுத்தவரை, சமீபத்தில் உயர்நிலை குழு கூட்டமும், செயற்குழு கூட்டமும் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்தில், வேட்பாளர் யார் என்பதில் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், வேட்பாளர் யார் என்பதை இன்று அறிவிப்பதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 10 நாட்களாக எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம், ஓ.பன்னீர்செல்வம் விருப்பப்படி, 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, தேனி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார்.
இந்த நிலையில், நேற்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தங்களது இல்லங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் சென்றார்கள்.
அதேபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு, அமைச்சர் டி.ஜெயக்குமார், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்றனர். அவர்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் மதியம் 1.40 மணி வரை சுமார் 2½ மணி நேரம் நடைபெற்றது. நேற்று மாலை மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மீண்டும் இருதரப்பு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள்.
அ.தி.மு.க. வழிகாட்டு குழுவில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தரப்பில் 6 உறுப்பினர்களும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 5 உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது.