கடந்த 5 மாதங்களாக மாணவர்கள் வராதபோதும், சில கல்லூரிகள் போக்குவரத்து, உணவுக் கட்டணத்தைக் கட்டச் சொல்வதாகப் புகார் எழுந்ததன் பேரில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (AICTE) தலையிட்டுள்ளது

கொரோனா காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களில் பெரும்பாலானோர் தற்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். இதற்கிடையே கடந்த 5 மாதங்களாக மாணவர்கள் வளாகத்துக்கு வராதபோதும், சில கல்லூரிகள் போக்குவரத்து, உணவுக் கட்டணத்தைக் கட்டச் சொல்வதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக ஏஐசிடிஇ, அனைத்துத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்கள் பயன்படுத்தாத வசதிகளுக்காகக் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது. குறிப்பாக போக்குவரத்து மற்றும் உணவுக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. எனினும் போக்குவரத்து மற்றும் உணவுக்கான பராமரிப்புக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். இதைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நவம்பர் 10ஆம் தேதிக்குள் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை திரும்பப் பெறும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்று அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் புதிய ஊரடங்கு தளர்வு அறிவிப்பின்படி, பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 30 வரை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




