கேரளாவில் பொது இடங்கள், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகள் போன்றவற்றில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.இயற்கை எழில் நிறைந்த மாநிலங்களுள் ஒன்றாக கேரளா உள்ளது. எனவே தனது மாநில வளங்களை பாதுகாக்கும் நோக்கில் கேரள அரசு அவ்வப்போது பல திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய திட்டம் ஒன்றை தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து கேரளா அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ”குப்பை, கழிவுகளை பொது இடங்களிலோ அல்லது ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளிலோ போடுபவர்கள் பற்றி புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்களுடன் உள்ளாட்சித்துறை அலுவலகங்களின் செயலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், தகவல் தரும் நபர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.குப்பை கொட்டுபவருக்கு அபராதமாக விதிக்கப்படும் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2500 வரை தகவல் தருபவருக்கு பரிசாக வழங்கப்படும். இதற்கான வாட்ஸ்அப் எண்கள், மெயில் ஐ.டி. ஆகியவை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக விளம்பரப்படுத்தப்படும்.பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவோருக்கு குறைந்தது ரூ.250 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் குப்பை, கழிவுகளை போடுவோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.”என்று கூறப்பட்டுள்ளது.