₹1,000 கோடி ஸ்டுடியோ ஊழலில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மீது கிரித் சோமையா குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜகவின் முன்னாள் எம்பி கிரித் சோமையா தொடர்ந்து சிவசேனா கட்சியினர் மீது ஊழல் புகார்களை கூறி வருகிறார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் அஸ்லாம் சேக் ஆகியோர் ₹1,000 கோடி ஸ்டுடியோ ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இருவரும் விதிமுறைகளை மீறி மும்பை வடக்கு மலாட் மத்மார்வ் பகுதியில் கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு உட்பட்ட இடத்தில் திரைப்பட ஸ்டுடியோ கட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். மாநகராட்சி அதிகாரிகளுடன் நேற்று அந்த கட்டடத்தை கிரித் சோமையா பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2021ம் ஆண்டு கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு உள்பட்ட பகுதியில் திரைப்பட ஸ்டுடியோ அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது. அப்போது,சுற்றுச்சூழல் அமைச்சகத்தை முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே தன் வசம் வைத்திருந்தார். 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த கட்டடத்தை இடிக்க உத்தரவிட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மும்பை மாநகராட்சி இந்த கட்டடத்திற்கு அக்டோபர் 2022ம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கி உள்ளது. இந்த ஸ்டுடியோ மற்றும் வணிக கட்டமைப்பில் ₹1,000 கோடி ஊழல் நடந்துள்ளது என்று கூறினார்.




