தெலுங்கானா மாநிலத்தில் ஒரே நாளில் பெய்த அதீத கனமழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கனமழை காரணமாக ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலபுரம், தம்மாய்குடா, அட்டப்பூர் மெயின் ரோடு, முஷீராபாத் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தன.

கடுமையாக பாதிக்கப்பட்ட டோலி சவுக்கி போன்ற பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளன.
தொடர் மழையால் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், அத்தியாவசியமற்ற சேவைகளுக்கு நேற்றும்(அக்.,14), இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தெலுங்கானாவின் சில பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதில், ஐதராபாத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளன. அதிகமான மழைப்பொழிவால் ஹிமாயத் சாகர் அணை திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

ஐதராபாத்தில் ஒரே நாளில் சுமார் 200 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஐதராபாத்தில் அக்டோபர் மாதத்தில் பதிவான மிக மோசமான மழையளவாக கருதப்படுகின்றது. கனமழை தொடர்வதால், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என அம்மாநில தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
ஐதராபாத்தின் பந்த்லகுடாவில் கனமழை காரணமாக, இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர்.




