சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை-2020ஐ தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன், சுற்றுச்சூழல் சான்று தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மோடி அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தான் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு, சட்டம் ஆகும் முன்பே, மக்கள் விரோத நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியுள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020, தொழிற்சாலைகளுக்கு ஆதரவாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிராகவும் மாறும். தனியார் திட்டங்களுக்காக விவசாயிகள் மற்றும் தனியார் நிலத்தை அபகரிக்க மட்டுமே உதவும். இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது.தமிழகத்திற்கு எதிரானது.
சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சூழலியல் மதிப்பீட்டு வரைவு அறிக்கை – 2020 இன் மூலம் அடிப்படையில் கடுமையான மாற்றங்களை செய்திருக்கிறார். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய வரைவு அறிக்கை மக்களின் பங்களிப்பை முற்றிலும் நிராகரிக்கிறது. இந்த வரைவு அறிக்கை சில திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நிலக்கரி சுரங்கங்கள், எண்ணெய் வளங்களை கண்டறிய ஆய்வு செய்தல், மீத்தேன் மற்றும் ஷெல் கேஸ் போன்ற திட்டங்களுக்கு விலக்கு அளித்திருப்பது ஏதோ தமிழ்நாட்டிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட திட்டமாகவே கருத வேண்டியிருக்கிறது.
மக்களுடன் கலந்துரையாடலோ, மக்கள் பங்களிப்போ இல்லாமல் இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உரிமை அளித்திருக்கிறது. இந்த வரைவு அறிக்கை சட்டமாக நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு சுடுகாடாக ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கு இருக்கிறது. இதனை முதலமைச்சர் உணர்ந்து உடனடியாக செயல்பட வேண்டும். மண்ணையும், விவசாயிகளையும் அழிக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக, அனைத்துக் கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஓரணியில் திரண்டு போராட வேண்டுகின்றேன் என்று வலியுறுத்தியுள்ளார்.