மங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த முத்தப்போட்டி விவகாரம் தொடர்பாக 8 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
தட்சின கன்னட மாவட்டம், மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் சீருடை அணிந்த மாணவர், மாணவியின் உதட்டோடு உதடாக (லிப்லாக்) முத்தம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதாவது, அடுக்குமாடி குடியிருப்பில் 8 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகள் இருந்துள்ளனர். அப்போது, அவர்கள் ‘ட்ரூத் அண்ட் டேர்’ என்ற பெயரில் கேம் விளையாடியுள்ளனர். இந்த விளையாட்டில் தங்களுக்கான வாய்ப்பு வரும்போது கேள்வி கேட்பார்கள். அதற்கு சரியாக பதில் சொல்லிவிட்டால் அவர்கள் சொல்லும் சவாலை ஏற்க வேண்டும். அப்படித்தான் முத்தமிடும் சவாலும் நடந்துள்ளது. இந்த 8 மாணவர்களும் அந்த 2 மாணவிகளை அடுத்தடுத்து முத்தமிட்டு பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை மாணவர்களில் ஒருவன் வீடியோவாக எடுத்து சமூக வலைதளம் மற்றும் கல்லூரி வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட இதைபார்த்த கல்லூரி நிர்வாகம் மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
கைதான 8 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அந்த 2 மாணவிகளும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த சம்பவம் நடந்து 6 மாதங்கள் ஆகிறது. ஆனால், கல்லூரி நிர்வாகம் தரப்பில் காவல்துறைக்கு எந்த புகாரும் செல்லவில்லை. மேலும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 376 (ஒரே பெண்ணை மீண்டும், மீண்டும் பலாத்காரத்திற்கு உட்படுத்துதல்),
354 – உள்நோக்கத்துடன் தாக்குதல்
354 சி – பெண்ணின் அந்தரங்கங்களை பார்ப்பது அல்லது படம் பிடிப்பது
120 பி – தொடர் குற்றச்சதியில் ஈடுபடுதல்
உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.