பாகிஸ்தானில் உள்ள ஒரு சீக்கிய குருத்வாரா மசூதியாக மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இந்தயாவின ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த போது இந்துக்கள், சீக்கியர்கள் அங்கு வசித்துள்ளனர். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது. தற்போதைய பாகிஸ்தானில் இப்போதைய இந்தியாவின் பிரபல அரசியல் தலைவர்கள் பிறந்த இடம் உள்ளது.
குறிப்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த இடம் கராச்சியிலும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த இடம் கா என்னும் இடத்திலும் உள்ளது. இன்றும் பாகிஸ்தானில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். கடந்த 1745 ஆம் ஆண்டு சீக்கிய மதத்திற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த அஸ்தான் பாய் தாரு ஜி என்பரின் நினைவாக லாகூரில் உள்ள நவுலகா பஜார் பகுதியில் குருத்வாரா ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த சீக்கிய வழிபாட்டுத் தளத்தை தற்போது மசூதியாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பாகிஸ்தானில் வாழும் சீக்கியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வசிக்கும் சீக்கியர்களுக்கு எதிரான நடவடிக்கை இது என்றும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா பாகிஸ்தானிடம் கேட்டுக்கொண்டுள்ளது. வரலாற்று புகழ்மிக்க, பாகிஸ்தானிய சீக்கியர்களின் அடையாளமாக விளங்கும் இந்த குருத்வாராவை மசூதியாக்கும் முயற்சியை சீக்கியர்களின் மனதை புண்படுத்தும் என்றும், இந்த நடவடிக்கைக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களின் பாதுகாப்பு, மற்றும் அமைதியை பாதுகாக்க பாகிஸ்தான் உறுதியளித்துள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.