சென்னையில், இடைவிடாமல் பெய்து வரும் கன மழையின் காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்கு கூட வெளியேற முடியாத அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கியதால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மணி நேரங்களாக மட்டுமே அங்கு மழை நின்றுள்ளது.

மேலும், தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மின்சாரத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட சில முக்கியமான துறைகளைத் தவிர பிற அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




