வங்கிக் கடனை திருப்பி செலுத்துவதற்கான அவகாசத்தை 2 ஆண்டுகள் வரைகூட நீட்டிக்க தயாராக உள்ளதாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டு ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். வங்கிக்கடனுக்கான மாத தவணையை செலுத்த மத்திய அரசு 6 மாத காலம் அவகாசம் வழங்கி இருந்தாலும் (ஆக.31ல் முடிவடைந்தது), சில வங்கிகள் கடனை கட்டாயம் செலுத்த வலியுறுத்தியதாக புகார்கள் எழுந்தன.இதனிடையே, வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு வட்டி வசூலிப்பதாக ஆக்ராவை சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வங்கிகளின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 2 ஆண்டுகள் வரை கடனை செலுத்த கால அவகாசம் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், பல தரப்பில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை அடையாளம் காணும் பணியில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தவர், முடிவுகளை அறிவிக்க அவகாசமும் கோரினார்.
அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை நீண்ட காலத்திற்கு இழுக்க கூடாது எனவும், வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு எதிராக நாளை முடிவெடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.