கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட தாஜ்மஹால் செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி:
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை.இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மஹால் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்ததால் சுற்றுலாத்துறைக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 21 ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மஹால்,ஆக்ரா கோட்டை ஆகியவை திறக்கப்படும் என்று மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அறிவித்துள்ளது.
தாஜ்மஹால் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே தரப்படும், தினமும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும், தாஜ்மஹால் செல்லும் பார்வையாளர்கள் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.




