சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற திமுக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் இன்று 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பு ஊர், ஊராக சென்று கிராம சபை கூட்டங்களை நடத்திய தான் முதலமைச்சர் ஆனால் 100 நாட்களில் உங்களுடைய புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். அதற்கு தனி துறையையே உருவாக்குவேன் என தெரிவித்திருந்தார்.
கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ரூ- 4000 அறிவித்து அதனை உடனடியாக முதல் தவணையாக 2000 மே மாதத்திலேயே வழங்கப்படும் என்பது ஏழைகளின் ஏக்கத்தைப் போக்கியிருக்கிறது, ஆவின் பால் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணிக்கலாம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை ஆகிய 4 கோப்புகளைத் தவிர, 5வதாக ஸ்டாலின் நிறைவேற்றியுள்ள திட்டம் கவனம் ஈர்த்துள்ளது.
இதுவரை எந்த முதலமைச்சர்களும் செய்யாத வகையில் மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் மக்களின் புகார்கள் மூலம் 100 நாட்களுக்கு தீர்வு காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




