5ஜி அலைக்கற்றைகான ஏலம் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டெல்லி,
இந்தியாவில் 4ஜி அலைக்கற்றை சேவை பயன்பாட்டில் இருக்கும் நிலையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி அலைகற்றைக்கான சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள்; உலக நாடுகளில் பலவும் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவும் அதன் போட்டியில் சேரவுள்ளது. இந்நிலையில் 5ஜி அலைகற்றைக்கான ஏலம் அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறலாம் என மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
அலைகற்றைக்கான ஏலங்களை கவனித்து வரும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 5ஜி அலைகற்றைக்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மார்ச் மாதத்தில் ஏலம் நடத்த ஆலோசனை மேற்கொண்டது; ஆனால் தொழில்நுட்ப ரீதியான சில கருத்துகளை பெற வேண்டியுள்ள காரணத்தினால் ஏப்ரல்-மே மாதங்கள் ஆகும் எனவும் ஏலம் நடப்பது நடுநிலையாக இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டமைப்பினை அடுத்த 2-3 வருடங்களில் மாற்ற மத்திய அரசு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்ட மத்திய அமைச்சர்,சேவையின் தரத்தை மேம்படுத்த எத்தகைய கட்டமைப்பினை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற முயற்சிகளும் நடைமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஆய்வுகளின் படி 2020ம் ஆண்டில் 34 நாடுகளில் 378 நகரங்களில் 5ஜி சேவை பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.




