முதலில் இந்த உலகில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். “மாதா,பிதா,குரு தெய்வம்” என்று சொல்வார்கள். இவ்வுலகில் நம்மைப் பெற்ற தாய், தந்தையருக்குச் சமமாக உயர்வாக மதிக்கப்படுபவர்கள் ஆசிரியர்கள்!

நாம் ஒவ்வொருவருக்கும் நம் தாய்மொழியில் பேசக் கற்றுக்கொடுத்து, நம் உறவுகளை நமக்கு அறிமுகம் செய்து, அவர்களின் முக்கியத்துவத்தை உணர வைத்த நம்மைப் பெற்ற தாயும், நமக்கு ஒழுக்கநெறி கற்றுத் தந்து நல்ல பிள்ளைகளாய் நம்மை வளர்த்தெடுத்த நம் தந்தையுமே கூட நம் ஆசிரியர்கள்தான்.! நமக்குக் கல்விச் செல்வத்தைப் போதித்து நம்மை வாழ்வின் அடுத்த கட்டத்தை அடைவதற்கு உதவியாக இருப்பவர்கள் நமக்குப் பாடம் புகற்றும் குருக்களாகிய நம் ஆசிரியர்களே!.
இந்த உலகத்திலேயே மிகவும் புனிதமான மதிக்கத்தக்க தொழில் என்னவென்றால், அது ஆசிரியர்த் தொழில்தான்..! நமக்கெல்லாம் நாம் பெற்ற பிள்ளைகள் மட்டுமே பிள்ளைகள், ஆனால் ஆசிரியர்களுக்கோ அவர்களிடம் படிக்கும் அனைத்து மாணவர்களுமே தம் பிள்ளைகள்தான்!
ஆம்! உண்மைதான்! தன் வகுப்பில் உள்ள அனைத்துப் பிள்ளைகளையுமே தன் பிள்ளைகளாகவே கருதுவார்கள் ஆசிரியர்கள்! , அப்பிள்ளைகளுக்குப் பாடம் புகட்டி, நீதிநெறிக் கதைகள் பலகூறி தன்னிடம் பாடம் பயிலும் அனைத்து மாணவர்களையும் கல்வியில் மட்டுமல்லாமல் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக வளருவதற்கு ஒரு ஊன்றுகோளாக இருக்கிறார்கள் ஆசிரியர்கள்!

போட்டிகள் பலவைத்துத் தங்கள் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதோடு, வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் பலதந்து, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு திறவுகளாக இருந்து, அவர்களின் திறமைகளை மென்மேலும் வளரச்செய்து அவர்கள் தம் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்வதற்கு உதவிகரமாக இருக்கும் அனைத்து ஆசிரியர்களுமே மதிப்பிற்குரியவர்களே!
தான் பெற்ற பிள்ளைகள் தன் வாழ்வில் முன்னேறும்பொது பார்த்து சந்தோஷப்படுவதைப் போல், ஒவ்வொரு ஆசிரியரும் தன்னிடம் படித்த பிள்ளைகள் தங்கள் வாழ்வின் சிகரத்தை அடையும்போது, அதனைப் பார்த்து அகம் மகிழ்ந்து பெருமிதம் கொள்வார்கள்!
எல்லோருடைய வாழ்விலும் கண்டிப்பாக ஆசிரியர்கள் ஒரு முக்கியப் பங்கினை வகிப்பார்கள். நம் வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு முறை தடுமாறும்போதும் நம்முடைய ஆசிரியர்களின் அறிவுரைகள் தான், நம்மைத் தடம்புரளவிடாமல் நல்வழியில் நம் வாழ்வை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்ல உதவுகிறது.
தன் மாணவர்களின் வெற்றியைத் தன் வெற்றியாக கருதும் ஒவ்வொரு ஆசிரியரும் மதிப்பிற்குரியவர்களே. இந்த உலகத்திலேயே நம் வெற்றியைப் பார்த்து சிறிதளவும் மனதில் பொறாமை கொள்ளாமல், மாறாக நம்முடைய வெற்றியை அவர்களின் வெற்றியாகக் கருதிப் பெருமிதம் கொள்பவர்கள் நம்மைப் பெற்றவர்களும், நம்முடைய ஆசிரியர்களும் மட்டுமே!
“கடமையே கண்கண்ட தெய்வம் ” என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல், இப்போது இந்தக் கொரோனா ஊரடங்கில்கூடத் தன்னுடைய கடமை தவறாமல் கணினியின் மூலம் மாணவர்களுக்குப் பாடம் புகட்டிக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களின் சிறப்பான இந்தப் பணியானது நிச்சயம் பாராட்டுக்குரியது! நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் மதிப்பிற்குரியவர்களே!

ஒவ்வொரு மாணவனின் வெற்றிக்குப் பின்னாளும் ஆசிரியர்களாகிய உங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றே!. நீங்கள் கற்ற கல்வியை மற்ற மாணவர்களுக்குப் புகட்டி உங்களிடம் பயிலும் ஒவ்வொரு மாணவர்களையும் மருத்துவராக, பொறியாளராக,அறிவியல் விஞ்ஞானியாக மாற்றி, உங்களைவிட உயர்ந்த இடத்தில் அவர்களை நிறுத்தி, அவர்களைப் பார்த்து பெருமிதமும் கொள்ளும் உங்களின் உயர்ந்த குணம் அனைவராலும் போற்றுவதற்கு உரியதே!
அப்படிப்பட்ட ஆசிரியர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த ஆசிரியர் தினத்தன்று என் வழ்வில் மட்டுமல்ல நம் அனைவரின் வாழ்விலும் பல கடினமான படிகளைக் கடந்து வருவதற்கு ஏணிப்படியாக அமைந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் என் இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!.. வாழ்க வளமுடன்!




