வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் டிசம்பர் 11-ந் தேதி முதல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
திருச்சியில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
வேளாண் சட்டங்கள்
டெல்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு ஏற்கலாம் அல்லது ஏற்க மறுக்கலாம். ஆனால், அந்தப் போராட்டம் குறித்தோ, அவர்களது கோரிக்கை குறித்தோ ஒரு வார்த்தைகூட வெளிப்படையாக ஊடகத்திலோ அல்லது விவசாயிகளிடத்திலோ இதுவரை பேசாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. டெல்லியில் போராடும் விவசாயிகளின் உயிருக்கும், உடைமைகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் பிரதமர் மோடிதான் பொறுப்பு.
விவசாயிகளின் போராட்டத்துக்கு கனடா நாட்டின் பிரதமர் தார்மீக ஆதரவு கொடுத்திருக்கிறார். ஆனால், பிரதமர் மோடியோ விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இது மனிதநேயமற்ற செயல்.
தமிழர்களுக்கு துரோகம்
நாடாளுமன்றத்தில் புதிய வேளாண் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்தது தமிழர்களுக்குச் செய்த துரோகம். எனவே, புதிய வேளாண் சட்டத்துக்கு அளித்த ஆதரவை அ.தி.மு.க. திரும்பப் பெற வேண்டும். இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்.
இல்லையெனில், முதல்வரை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர் போராட்டம்
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டிச.11-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.