திமுக ஆட்சிக்கு வந்ததும் பயிர்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படும். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தார்.
அப்போது உரையாற்றிய ஸ்டாலின், 2006ஆம் சட்டமன்றத் தேர்தலின் போது 7,000 கோடி விவசாயக்கடனை தள்ளுபடி செய்வோம் என கருணாநிதி அறிவித்தார். ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் அல்ல ரூ.7000 கோடி எப்படி கொடுக்க போகிறீர்கள் என்று கேட்டோம். கடன் வாங்கியவர்கள் பெரும்பாலும் அதிமுகவினரே அதிகம் என்று சொன்னோம்.
ஆனால், அவர்களை அதிமுககாரர்களாக பார்க்கவில்லை, விவசாயிகளாகப் பார்க்கிறோம் என்று கருணாநிதி சொன்னார். ஆட்சிக்கு வந்ததும் பதவியேற்ற மேடையிலேயே முதல் கையெழுத்து இட்டார் என பேசினார்.
விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்யச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த அரசு மறுத்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளதாக சுட்டிக்காட்டிய ஸ்டாலின், 4 மாதத்தில் ஆட்சிமாற்றம் வரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். சிறு விவசாயி, பெருவிவசாயி பாகுபாடின்றி ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.
read more: சசிகலா என்னை முதல்வராக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
அத்துடன், விவசாயிகள் வறுமை காரணமாக தங்க நகைகளை அடமானம் வைத்து வட்டிக்கு வட்டி செலுத்தி வருகிறார்கள். ஆகவே, 5 பவுன் வரை கடன் வைத்துள்ளவர்கள் அத்தனை கடனையும் ரத்து செய்வோம் என நாடாளுமன்றத் தேர்தலில் அறிவித்தேன். அதனை நிறைவேற்றுவேன் என்ற உறுதியையும் அளித்தார்.