காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் தனது ஆடையை கிழித்ததாக கரூர் காங்கிரஸ் எம்பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் அமலாக்கத்துறை கடந்த 3 நாட்களாக சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் எம்பிகள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக குடியரசுத் தலைவரை சென்று சந்திக்க முயற்சித்தனர். தடையை மீறி அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி செல்ல முயற்சித்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர். எம்பிகளை கைது செய்யும் போது தனது ஆடைகளை போலீசார் கிழித்ததாக கரூர் எம்பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இச்சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளனர்.
-பா.ஈ.பரசுராமன்.




