பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியா இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற குரல் பெருவாரியாக எழுந்தது. அரசியல் மற்றும் ஆட்சி அதிகார மட்டத்திலும் பெரும் அனலைக் கிளப்பியது. இதைத்தொடர்ந்து 7ம் தேதி நாடு முழுவதும் 256 இடங்களில் போர் ஒத்திகை நடைபெறும் என இந்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து லக்னோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடைபெற்றால் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு தீவிரவாத அமைப்புகள் வசிக்கும் 9 இடங்களைக் கண்டறிந்து தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது. ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாம் செயல்பட்டு வந்த பகவல்பூரில் உள்ள மார்க்கஸ் சுபான் அல்லா என்ற இடம், லஷ்கர் இ தொய்பா செயல்பட்டு வந்த முரிக்கேவில் உள்ள மார்கஸ் தைபா, சார்ஜாவில் உள்ள டெஹ்ரா கலன், சியால்கோட்டில் இந்தியன் முஜாஹூதீன் தீவிரவாதமுகாம் செயல்பட்டு வந்த மெஹ்மூனா ஜோயா என்ற இடம், பர்னாலாவில் உள்ள மார்கஸ் அலே, கோட்லியில் உள்ள மஸ்கார் ரஹூல் சாஹித் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய அளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் இத்தாக்குதலுக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
