ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென ரசிகர்கள் ஒன்றிணைந்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொண்டதன் காரணமாக உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரமாட்டேன், கட்சி தொடங்கமாட்டேன் என்று அறிவித்துவிட்டார். ஆனாலும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
ரஜினியை அரசியலில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடப் போவதாக சில ரசிகர்கள் பேசிவருவது அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயல் என்ற ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர், ரஜினி மீது அன்பும் அவர் நலனில் அக்கறையும் கொண்ட மன்றத்தினரும் ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தினார். ஆனாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி இன்று போராட்டம் நடைபெற்றது. ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக பல ஆண்டுகளாக இருக்கும் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினி ரசிகர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
read more: சட்ட மேற்படிப்புக்கும் நுழைவுத் தேர்வா? வைகோ எதிர்ப்பு!
ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வலியுறுத்தும் பதாகைகளையும் ரசிகர்கள் அங்கு வைத்திருந்தனர்.வா தலைவா வா.. இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை.. உங்கள் ஆட்சி வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை ரஜினி ரசிகர்கள் எழுப்பினர்.
அப்போது பேட்டியளித்த ஒரு ரசிகர், 2020 ஆம் ஆண்டு கொரோனா வந்து எப்படி உலகை அச்சுறுத்தியதோ…அதே போல ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து உலகையே அச்சுறுத்தனும். ஆட்சி மாற்றம் அவர் ஒருத்தரால மட்டும்தான் முடியும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து ரசிகர்கள் போராடி வருகின்றனர்.




