டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு மத்திய சுகாதார குழு அனுப்பி வைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நிலைமை குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பிற சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, டெல்லி அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனவும், அதேபோல் டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். டெல்லி மட்டுமின்றி டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசால் நிபுணர் குழுஅனுப்பி வைக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லியை பொறுத்தமட்டில் இந்த ஆண்டு 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருக்கிறார்கள். இதுவரை மொத்தமாக 1,537 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.




