வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் அறிவித்துள்ள பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தி.மு.க. கூட்டணி கட்சிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்லி போராட்டம்
இந்திய விவசாயிகளின் போராட்டம் அகில உலகக் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. விவசாயிகளின் அணி வகுப்புகள், டிராக்டர்கள் என டெல்லி அறவழிப் போராட்டத்தின் மூலமாகவே புதுமையான போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவோம் என்றோ, அதன் பிறகு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றோ, மத்திய அரசு கொள்கையளவில் ஒப்புக்கொள்ள முன்வரவில்லை என்பது கண்டனத்திற்குரியது. தினமும் விவசாயிகள் டெல்லியில் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.
பாரத் பந்த்
ஆனாலும், மத்திய அரசு இழுத்தடிக்கிறதே தவிர, அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்கவில்லை. நான்கு முறை அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்தும், இதுவரை மத்திய பாஜக அரசு எவ்வித நம்பிக்கைக்குரிய வார்த்தைகளையும் விவசாயிகளுக்குத் தெரிவிக்கவில்லை. பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று, அதன் தலைமையில் பேச்சுவார்த்தை நேற்றைய தினம் நடத்தியும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து, தங்கள் கோபத்தைத் தெரிவிக்கும் வகையில் பேச்சுவார்த்தையிலேயே மவுன விரதமிருந்து, டிசம்பர் 8-ம் தேதி ‘பாரத் பந்த்’ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.
தி.மு.க. கூட்டணி ஆதரவு
அவர்கள் ‘மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறுங்கள்’ என்று முன்வைக்கும் கோரிக்கை முழுக்க முழுக்க நியாயமானது. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, மத்திய அரசின் முன் வைத்துள்ள கோரிக்கைக்கு ஆதரவளித்து, டிசம்பர் 8-ம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று நடத்த அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய முழு அடைப்புக்கு மனமார்ந்த ஆதரவு அளிக்கிறோம். ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூகநல அமைப்புகள்,மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் அமோக ஆதரவளித்து, ‘பாரத் பந்த்’தை வெற்றி பெறச் செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள்
இந்த கூட்டறிக்கையில் மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.