தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
டிஎன்பிஎஸ்சி தொடர்பான வழக்கில் தமிழ்வழி பயின்றவர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டை முறைப்படுத்துவது தொடர்பான சட்டத் திருத்த மசோதா கடந்த எட்டு மாதங்களாக ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல் இருப்பில் இருப்பதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆளுநரின் செயலர், உள்துறை செயலர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து இம்மனு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து, தமிழ் வழி 20 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கும், அதற்கு அழுத்தம் கொடுக்காத தமிழக அரசுக்கும் கண்டனங்கள் வலுத்தது. உடனடியாக ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இல்லையெனில் திமுக போராட்டம் நடத்தும் என ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் 1ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடிய அனைத்தையும் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு முறையாக சென்று சேரும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதுபற்றி திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்வழி படித்தோருக்கு அரசுப்பணிகளில் 20% இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்திற்கு 8 மாதமாக அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என்று இரு நாட்களுக்கு முன்பு கேட்டேன். ஆளுநர் அனுமதி வழங்கியதாக செய்தி கிடைத்துள்ளது. நன்றி என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 8 மாதமாக தூங்கிய தமிழக அரசின் மந்த நிலைக்குக் கண்டனங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.