மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள் – ஆறு பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன் உள்ளிட்ட 4 பேரும், அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோரும் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. தொடர்ந்து, அந்த 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைக்கும்.
அதனடிப்படையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சார்பில், தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் அறிவிக்கப்பட்டனர்.மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற்றது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பத்மராஜன் உட்பட 7 சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை ஜூன் 10ம் தேதி சட்டப்பேரவை செயலகத்தில் நடைபெற்றது. இதில், எம்எல்ஏக்கள் முன்மொழிவு இல்லாத காரணத்தால் சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக சார்பில் போட்டியிட்ட கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா மற்றும் சிவலிங்கம் ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டன. அதேபோல் அதிமுக வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டன. இதையடுத்து, திமுக வேட்பாளர்களான பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுக வேட்பாளர்கள் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றித் தேர்வாகினர்.
வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு இன்று மாலை 3 மணி வரை கால அவகாசம் உள்ள நிலையில், 3மணிக்கு பின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் இன்றைய தினமே வழங்கப்படும்.




