தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், நேற்று முன்தினம் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கி கௌரவித்தார்.மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் ஊக்கத்தொகை வழங்கிய நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது. அப்பொழுது பெரியார், அம்பேத்கர், காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும் என அவர் பேசியிருந்தார். நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் இது குறித்து அவருடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது, பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது நல்ல விஷயம், அவர் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது; பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை முன்னுதாரனமாக காட்டி அவர் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.