தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலளார் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 200 சட்டமன்றத் தொகுதிகள் என்பதை இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறது. இதனால் பொறுப்பில் இருந்தும் செயல்படாத மற்றும் வாய்த்துடுக்காக பேசக் கூடியவர்களையும் மாற்றி வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகவும் ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்து வருபவருமான கல்யாணசுந்தரத்தை திமுக மாற்றி இருக்கிறது.
கல்யாணசுந்தரம் எம்.பி.யின் சர்ச்சைப் பேச்சு
கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட சேஷம்பாடி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லத்திற்கான பணிகள் தொடங்குவதற்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், ராஜ்யசபா எம்.பி கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், அரசு அதிகாரிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கல்யாணசுந்தரம், “அரசு எவ்வித திட்டம் போட்டாலும், அரசுக்கு நற்பெயரை வாங்கிக்கொடுப்பது அரசு அதிகாரிகள் தான். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெரியவர் ஒருவர், கும்பகோணத்தில் முறையான குடிநீர் இல்லை, சாலை வசதி இல்லை, தெரு விளக்கு இல்லை என சண்டை போட்டார். அதற்கு எல்லாம் உடனே தீர்வு கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட பத்து மாதத்திற்குப் பிறகு தான் குழந்தை பிறக்கும். திருமணத்திற்கு முன்பே, திருமணம் நடக்கின்ற அன்றே குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது வேறு விதமாகத் தான் பிறக்கும். முன் கூட்டியே காதல் செய்து, கர்ப்பமானால் திருமணம் ஆகும் அன்றே குழந்தை பிறக்கும். எனவே, மக்களைத் தேடி வருபவர்களிடம் ஆத்திரப்பட்டுப் பேசுவதால், கோபப்பட்டுப் பேசுவதால், திட்டி பேசுவதால் நல்ல விஷயங்கள் செய்ய வருபவர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும். அவர்களிடம் அனுசரித்து, ‘வேலை எல்லாம் செய்து கொடுங்கள்’னு கேட்கனுமே தவிர, விதண்டாவாதமாகப் பேசக்கூடாது” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

போலி ஐ.எஸ்.ஐ லேபிள்கள்
இதே போல் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனத்தையொட்டி செல்லக்கூடிய உள்ளூர் வாய்க்காலின் மேல் பகுதியில் ரூ.90 லட்சம் செலவில் கான்கிரீட் தளம் அமைத்திருந்தனர். அதன் தலைவராக இருக்க கூடிய தி.மு.க எம்பி கல்யாணசுந்தரத்தின் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்காக வாய்க்கால் இடத்தை ஆக்கிரமித்து தளம், மேற்கூரை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு கல்யாணசுந்தரம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் மேலும் ஆளும் கட்சி பெயரைப் பயன்படுத்தி கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து ஆக்கிரமிப்பை அகற்றாமல் தடுத்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதே போல் கல்யாணசுந்தரம் எம்.பி.யின் மகன் முத்துசெல்வம் ஹோலி டிராப் பேக்கேஜ்டு என்ற குடிநீர் நிறுவனத்தை தஞ்சாவூர் மாவட்டம் பம்பபடையூரில் நடத்தி வருகிறார். இந்தக் குடிநீர் ஆலையில், போலி ஐ.எஸ்.ஐ லேபிள்களைப் பயன்படுத்தியது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மகனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி
இப்படி கல்யாணசுந்தரம் எம்.பி.,யைச் சுற்றி சர்ச்சைகள் சுற்றிய நிலையில் கடந்த வாரம் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த கல்யாணசுந்தரம், வயது முதிர்வு காரணமாக மாவட்ட செயலாளர் பதவியில் போதுமான அளவுக்கு பணியாற்ற முடியாததால் தன் மகனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டதாகவும் அறிவாலயம் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த சூழலில் தான் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து கல்யாண சுந்தரம் எம்.பி விடுவிக்கப்பட்டு மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடிய கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகனுக்கு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு மாற்றங்களை திமுக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.




