ஆயிரம்விளக்கு தொகுதியில் மக்கள் மனதில் வெற்றி வேட்பாளராக நடிகை குஷ்பூ இடம் பிடித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி வசித்த கோபாலபுரம், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்திக், ராதா ரவி என முக்கிய சினிமா பிரபலங்கள் வசிக்கும் பகுதிகளை உள்ளடக்கியதால் ஆயிரம் விளக்கு தொகுதி எப்போதும் கவனம் பெறும் தொகுதியாக உள்ளது. நட்சத்திர தொகுதியான ஆயிரம் விளக்கில் திமுக 10 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 5 முறை போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் கோட்டை என அழைக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியை இந்த முறை முற்றிலும் தன் வசப்படுத்தியிருக்கிறார் பாஜக வேட்பாளர் குஷ்பு.
இந்த முறை பாஜக பலமான பல நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கியுள்ள போதும், ஊடகங்கள், சோசியல் மீடியாக்கள் என ஒட்டுமொத்த கவனமும் அக்கட்சி சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கியுள்ள குஷ்பு மீது குவிந்துள்ளது. அதற்கு காரணம் இன்று வரை முன்னணி நடிகை என்ற பந்தா துளியும் இல்லாமல், மக்களோடு, மக்களாக கலந்து ‘நானும் உங்கள் வீட்டு பெண் தான்… ஒரு சகோதரியாக எண்ணி எனக்கும் வாய்ப்பளியுங்கள்’ என கரம் கூப்பி வணங்கும் குஷ்புவின் பணிவும், ஆண்கள் மட்டுமே கோலோச்சும் அரசியல் களத்தில் எவ்வித பின்புலமும் இல்லாமல் பல சவால்களை கடந்து முதன் முறையாக தேர்தலை சந்திக்க களமிறங்கியிருக்கும் குஷ்புவின் துணிவும் தான் அனைவரது கண்களுக்கும் அவர் மட்டும் தனித்து தெரிய காரணமாக அமைந்துள்ளது.
புரட்சித் தலைவி ஜெயலலிதாவிற்கு அடுத்ததாக போயஸ் கார்டன் ஏரியாவில் உலவி வரும் குஷ்புவை அடுத்த அயர்ன் லேடியாக பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள். ஒருபுறம் குளு குளு ஏசியில் சொகுசாக வசிக்கும் நட்சத்திரங்களும், மறுபுறம் அனலில் இட்ட புழுவாய் தினமும் இன்னலுறும் சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களும் கலந்து வசிக்கும் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன் முறையாக களமிறங்கியதோடு மட்டுமல்லாது, ‘தோல்வி என்ற வார்த்தைக்கு என் அகராதியிலேயே இடம் கிடையாது’ என சொல்ல தனி தைரியம் வேண்டும் என நீங்கள் நினைத்தால்? அது குஷ்புவிடம் மட்டுமே உண்டு.
கவர்ச்சி திட்டங்களோ, போலி வாக்குறுதிகளோ, ஜோடனை பேச்சுக்களோ இல்லாமல், மக்களுக்கு அடிப்படையாக எது தேவை என்பதை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்ற உறுதியோடு களமாடி வருகிறார் குஷ்பு. பல ஆண்டுகளாக திமுக ஆட்சி செய்த ஆயிரம் விளக்கு தொகுதியில் ஏழைக் குழந்தைக்களுக்கு கல்வி என்பது இன்றளவும் எட்டக்கனியாகவே உள்ளது. சிறு வயது முதலே வறுமையும், ஏமாற்றங்களையும் அறிந்தவள் நான், கல்வி குழந்தைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன். அதனால் அவர்களுடைய பிள்ளைகளின் கல்வி தரம் உயர பாடுபடுவேன் என உறுதியளித்துள்ளார் குஷ்பு.
ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் வாக்கு சேகரிக்க செல்லும் போது, ஒரு குடும்ப தலைவியாக, பெண்ணாக, இரு குழந்தைகளின் தாயாக அந்த பகுதி மக்கள் படும் கஷ்டங்களை என்னால் நன்கு உணர்ந்துகொள்ள முடிகிறது. கல்விக்கு அடுத்தபடியாக அப்பகுதி மக்களுக்கு இன்றியாமையாத தேவையாக இருப்பது சுகாதாரம். தேங்கி கிடக்கும் குப்பைகளும், கழிவு நீர் சூழ் வீடுகளும் என்ற நிலையை பார்க்கும் போதே மனம் பதறுகிறது.நான் வெற்றி பெற்ற முதல் நாளில் இருந்தே சுத்தமும், சுகாதாரமும் கொண்ட பகுதியாக ஆயிரம் விளக்கு தொகுதி மாறும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
அடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்சனைகளை அக்குவேறு ஆணிவேறாக அறிந்து கொண்டு களத்தில் இறங்கியுள்ள குஷ்புவிற்கு மக்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இது என்ன பிரமாதம்… பிரபல நடிகை ஓட்டு கேட்டு வந்தால் பார்க்க 4 ஜனங்கள் கூடத்தானே செய்வார்கள் என்பவர்களது கவனத்திற்கு, குஷ்பு நினைத்திருந்தால் எதையும் சாதித்து இருக்க முடியும். ஆனால் அனுபவம் தான் அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் ஆசான் என்பதை உணர்ந்து திமுக, காங்கிரஸ் என இரு பெரும் கட்சிகளில் தனக்கு முறையாக அங்கீகாரம் கிடைக்காத போதும், கொடுக்கப்பட்ட சவால்களை திரும்பட செய்து முடித்தவர் குஷ்பு. மக்களுக்கு நம்பால் ஏதாவது செய்ய முடியாதா? நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என சிந்தித்துக் கொண்டிருந்த குஷ்புவிற்கு கதவுகளை திறந்ததோடு, பட்டுக்கம்பளமும் விரித்துக் கொடுத்திருக்கிறது பாஜக. பசியுள்ளவனுக்கு தான் உணவின் அருமை தெரியும். அதேபோல் மக்களுக்காக உழைக்க வேண்டும் என காத்திருந்தவனுக்கு தான் வாய்ப்பின் அருமை புரியும். அப்படிப்பட்ட குஷ்பு நமக்கான பிரதிநிதியாக மாறினால் அவர்களுடைய நிலை உயரும் என்பதை ஆயிரம் விளக்கு தொகுதி மக்களே சிந்திக்க தொடங்கியுள்ளனர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.