ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், மொத்தமுள்ள தொகுதிகளில் பாதிக்கு மேல் தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எந்த கட்சியும் இவ்வாறு வெற்றி பெறாத பட்சத்தில் தொங்கு சட்டசபை உருவாகும். இதர கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுடன் சேர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சி ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் தொங்கு சட்டசபை இரண்டு முறை ஏற்பட்டுள்ளது.
1952 சட்டமன்ற தேர்தல்
புதிய அரசியலைமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் 1952 சட்டமன்ற தேர்தல். 21 வயது நிரம்பியவர்கள் வாக்களித்த முதல் தேர்தல் இது. அன்றைய சென்னையில் இருந்த மொத்த தொகுதிகள் 375. தற்போதைய ஆந்திரா, கர்நாடகம், கேரள மாநிலங்களின் சில இடங்களும் மெட்ராஸ் மாகாணத்துடன் இணைந்திருந்தது. பின் மொழிவாரியாக அவைகள் பிரிக்கப்பட்டு விட்டன.
சுதந்திர போராட்டத்தில் முன்னணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மக்களிடம் செல்வாக்கு அதிகம் பெற்றிருந்தது. தவிர இடதுசாரி கட்சிகளும் தனியாக தேர்தல் களத்தில் குதித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு 152 இடங்கள் மட்டுமே கிடைத்தது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எப்படி ஆட்சியமைக்க முடியும்? எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சி(தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி), மாணிக்கவேலு நாயக்கர்(காமன் வீல் கட்சி), பி.பக்தவத்ச நாயுடு போன்றவர்கள் ஆதரவு அளித்ததால் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்தது காங்கிரஸ்.
2006 சட்டமன்ற தேர்தல்
1952 சட்டமன்ற தேர்தலுக்குப் பின், தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டது 2006 சட்டமன்ற தேர்தலில் தான். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின், மொத்தம் 234 தொகுதிகள் இருந்தது. திமுகவுடன் இந்திய தேசிய காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய பொதுவுடைமை கட்சிகள் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தது. நீங்கள் மட்டும் தான் கூட்டணி வைப்பீர்களா நாங்களும் வைப்போம் என்று அதிமுக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொண்டது. அந்த தேர்தலில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கட்சி விஜயகாந்தால் தோற்றுவிக்கப்பட்ட தேமுதிக. கட்சி ஆரம்பித்து ஓராண்டு மட்டுமே ஆகியிருந்த நிலையில் 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது.

விருத்தாசலம் தொகுதியில் நின்ற விஜயகாந்த்தை தவிர அவரது கட்சியினர் அனைவரும் தோல்வியைத் தழுவினர். ஆனால், முதல் தேர்தலிலேயே 8.4 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது தேமுதிக. முடிவில், நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக-வின் வெற்றி வாய்ப்புகளை தேமுதிக சேதப்படுத்தியிருந்தது. இதனால் திமுக-வுக்கு 96 இடங்களும், அதிமுக-வுக்கு 61 இடங்களும் கிடைத்தன. . எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் 1952க்குப் பின் மீண்டும் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. பின், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைத்தது திமுக.




