மயிலாடுதுறையில் பணத்திற்காக ஆசைப்பட்டு பெற்ற 14 வயதான மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய துணையாக நின்ற சிறுமியின் தாய் உள்ளிட்ட 5 பேர் கைதான சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
![14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய துணையாக நின்ற தாய் கைது!](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/sexual-harresment-1.jpg?resize=740%2C417&ssl=1)
மதுப்போதைக்கு அடிமையான ஆண்களால் பல குடும்பங்கள் சீரழிந்ததைபற்றி நாம் கேட்டிருப்போம். ஆனால் ஒரு பெண் மதுவுக்கு அடிமையாகி பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளுங்கள் என தாரை வார்த்த சம்பவமும் தமிழகத்தில் தற்போது அரங்கேறியுள்ளது. ஆம் மயிலாடுதுறையில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளார். என்ன தான் நிகழ்ந்தது 14 வயதான சிறுமிக்கு?
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள வரதம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி மாரியம்மாள் என்பவர் அக்கிராமத்தில் தூய்மைப்பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தகாத உறவு மற்றும் குடிப்பழக்கம் இருந்ததின் காரணமாக இவருடைய கணவர் கலியபெருமாள் 4 ஆண்டுகளுக்கு முன்பே இவரை பிரிந்து சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களது 3 வது மகள் மட்டும் தாய் மாரியம்மாளுடன் வசித்துவந்துள்ளார்.
![14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய துணையாக நின்ற தாய் கைது!](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/child-harresment.jpg?resize=740%2C417&ssl=1)
இந்த நிலையில் தான் தன் பணத்தேவைக்காக 14 வயது தன் மகளை , அக்கிராமத்தில் உள்ள முக்கியப்புள்ளிகளுக்கு வலுக்கட்டாயமாக தாரைவார்த்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அச்சிறுமி கர்ப்பமானதையடுத்து கருவினை கலைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் குழந்தை வளர்ந்துவிட்டதால் அதனை கலைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். எனவே ஊர்மக்களுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் தனியாக இச்சிறுமி வைத்து பார்த்துவந்துள்ளார்.
இதற்கிடையில் அச்சிறுமிக்கு பிரசவ வலி ஏற்படவே மயிலாடுதுறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது 2 வது மகளின் கணவர் தினேஷ் தான் அவரது கணவர் என மருத்துவமனையில் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பிரசவத்தில் இச்சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சிறுவயதிலேயே எப்படி கர்ப்பமானார்? மற்றும் இச்சிறுமியின் தோற்றத்தில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக சிறுமியின் தாய் குழந்தை திருமண சட்டத்தின் கீழும், மணல்மேட்டை சேர்ந்த 72 வயதான ராதாகிருஷ்ணன், திருவாளப்புத்தூரை சேர்ந்த 45 வயதுடைய செந்தில்குமார், கடலங்குடி சேர்ந்த ராஜ், உள்ளிட்ட நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
![14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய துணையாக நின்ற தாய் கைது!](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/sexual-hareesment-2.jpg?resize=800%2C400&ssl=1)
14 வயது சிறுமியின் வாழக்கையை பெற்ற தாயே சீரழித்த இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலுக்கு காரணமாக இருந்த அனைவரும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பதாக உள்ளது.