மனைவி நித்யாவிடம் இருந்து மகளை மீட்டுத் தர வலியுறுத்தி தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருக்கும் தாடி பாலாஜி, பிரபல தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக தாடி பாலாஜியும் அவருடைய இரண்டாவது மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த தம்பதிக்கு 12 வயதில் மகள் இருக்கிறார். தற்போது பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மகளை மனைவியிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தாடி பாலாஜி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய தாடி பாலாஜி, மனைவி நித்யாவின் தவறான வழிகாட்டுதலால் சமூக வலைதளத்தில் மகள் காணொலி பதிவிட்டு வருகிறார். இதனால் மகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. மனைவி நித்யாவை பற்றி எந்த கவலையும் கிடையாது. அவருடைய வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழட்டும். ஆனால் என் மகள் வாழ்க்கை மனைவியால் வீணாகி வருகிறது. அதற்காகவே குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளித்துள்ளேன் என்று அவர் கூறினார்.
கணவர் தாடி பாலாஜியின் கோரிக்கை மனு தொடர்பாக குறிப்பிட்ட ஊடகங்களுக்கு நித்யா பேட்டியளித்துள்ளார். அதில், பிரச்னையை தாடி பாலாஜி தான் வளர்த்து விடுகிறார். அது வெறும் புலம்பல் போல தான் தெரிகிறது. இதை சட்டப்பூர்வமாக சந்திப்பேன் என்று நித்யா தெரிவித்துள்ளார்.