ஆழியாற்றில் பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவு நீர் மற்றும் பாலித்தீன் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஆற்றுநீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆழியாறு அணையில் இருந்து வரும் தண்ணீர் ஆனைமலை, அம்பராம்பாளையம் மணக்கடவு வழியாக கேரளாவை சென்றடைகிறது. இந்த ஆற்றுநீர் துவங்கும் இடத்தில் மிகவும் தூய்மையானதாக உள்ளது. ஆனால் துவங்கும் இடத்தில் இருந்தே ஆனைமலை, அம்பராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாலித்தீன் குப்பைகள் கொட்டப்படுவதாலும், சாக்கடை கழிவு நீர் ஆற்றில் கலப்பதாலும் ஆற்று நீர் மாசுபடுகிறது.
இந்த ஆற்று நீரிலிருந்து ஆழியாறு அணை அருகே கம்பாலபட்டி கூட்டு குடிநீர் திட்டம், மயிலாடுதுறை பகுதியில் மயிலாடுதுறை கூட்டு குடிநீர் திட்டம், ஆனைமலை, வேட்டைகாரன் புதூர், ஒடையகுளம் பேரூராட்சி என மூன்று குடிநீர் திட்டம், அம்பராம்பாளையம் பகுதியில் இருந்து சூளேஸ்வரன்பட்டி, பெரியநெகமம், கிணத்துக்கடவு மற்றும் 64 கிராமங்களுக்குகான கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இது தவிர அம்பரம்பாளையம் பகுதியை அடுத்த குளத்தூர் பகுதியில் 295 கிராமங்கள் பயன்பெறும் கூட்டு குடிநீர் திட்டம், ஆத்துப்பொள்ளாச்சி பகுதியில் குறிச்சி, குனியமுத்தூர், கிணத்துக்கடவு பகுதிகளுக்கான குடிநீர் திட்டம் போன்றவை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனைமலை பகுதியில் பேரூராட்சிகளின் மூலம் சில குடிநீர் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளது. இந்த குடிநீர் திட்டங்களின் மூலம் பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இந்த ஆழியாற்றில் எங்கு பார்த்தாலும் கட்டுப்பாடின்றி குப்பைகள் கொட்டப்படுவதும், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் போடப்படும் நிலை உள்ளது. சாக்கடை கழிவு நீரும் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கப்படுகிறது.
ஆனைமலை பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் ஆழியாறும், உப்பாரும் ஒன்றுசேரும் இடத்தில் ஆற்று நீரில் கலக்கிறது. ஆனைமலை பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீரை சுத்திகரிக்க பேரூராட்சி சார்பில் சுத்திகரிப்பு செய்ய முதல் முயற்சியாக சுத்திகரிப்பு நிலையம் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டில் இல்லாமல் சாக்கடை கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது. மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஆழியாற்றில் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் வடிகால் வாரியத்தினர் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்காததால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் சாக்கடை நீர் கலப்பதால், மக்கள் நோய் வாய்ப்படுகின்றனர்.
ஆற்றில் இருந்து குடிநீருக்கு தண்ணீர் எடுத்தாலும் சுத்திகரிப்பு செய்யப்பட்டே பின்பே பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், பேரூராட்சி தலைவர்களும் தெரிவித்தாலும், சாக்கடை கலக்கும் முன் சுத்திகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.